சென்னையில் நடிகர் ராதாகிருஷ்ணனின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகையை கொள்ளையர்கள் சுருட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் ’எல்லாம் அவன் செயல்’ படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் ராதாகிருஷ்ணன் என்ற ஆர்.கே. இவர் ஜில்லா, அவன் இவன், அழகர் மலை உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவருயை மனைவி ராஜீ (53). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி ராஜீ மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்தது. அவர்கள் ராதாகிருஷ்ணன் மனைவி ராஜீயிடம் கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர். பின்னர் அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அவர்கள் சென்றதும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பதிவுகளை சேகரித்தனர்.

அத்துடன் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நேபாளி வாட்ச் மேன் ரமேஷ் தன்னுடைய 2 வடமாநில நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய கொள்ளையர்கள் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வருகின்றனர். மேலும், வெளிமாநிலத்திற்கு தப்பி செல்லாதவாறு விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கும் கொள்ளையர்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.