தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலா்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். இதுதவிர ஊராட்சி மன்ற நிா்வாகிகள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், புரவலா்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். நெகிழி வகை தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல், தேசியக் கொடியை தலைக்கீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக் கூடாது. இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read more: சம்பளம் கேட்ட ஊழியரை விரட்டி விரட்டி அடித்த கோழி வியாபாரி.. அதிர்ச்சி வீடியோ..!!