வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள்
இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், பயணத் தகவல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.
இதனால் திருட்டு பாஸ்போர்ட் தயாரிப்பு குறையும், விமான நிலையங்களில் வேகமான சரிபார்ப்பு நடைபெறும்.புதிய இ-பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட்டைப் போலவே தோற்றத்தில் இருக்கும். ஆனால் அசோக சின்னத்தின் கீழ் ஒரு சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சிப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் சேமித்து வைக்கும்.
இந்த e-Passport மூலம் திருட்டு பாஸ்போர்ட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் மேலும் விமான நிலையங்களில் குடியுரிமை சரிபார்ப்பு (immigration) செயல்முறைகள் வேகமாக நடைபெறும்.
வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) கான்சுலர், பாஸ்போர்ட் மற்றும் வீசா பிரிவு செயலாளர் அருண் குமார் சட்டர்ஜி இதுகுறித்து பேசிய போது “ இ-பாஸ்போர்ட்கள் பயன்படுத்த எளிதானவை, பாதுகாப்பானவை, விமான நிலையங்களில் நேரத்தைச் சேமிக்கின்றன மற்றும் சர்வதேச விமான தொழில்துறை விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளன.
இ-பாஸ்போர்ட்கள் வைத்திருப்பவர்கள் இனி விமான நிலைய குடிவரவு கவுன்டர்களில் (immigration counters) நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிய இ-பாஸ்போர்ட்கள் மூலம், நுழைவு வாயிலில் உள்ள ஸ்க்ரீனில் பாஸ்போர்ட்டிலுள்ள e-chip-ஐ தொட வைத்தால் கதவுகள் தானாகவே திறந்து விடும். அதிகாரிகள் இனி ஒவ்வொன்றையும் கையால் சரிபார்க்க வேண்டியதில்லை. இது Trusted Traveller Programme-ன் ஒரு பகுதியாகும். இது இந்திய விமான நிலையங்களில் உலகத் தரத்திலான டிஜிட்டல் பயண முறையாகும்.” என்று தெரிவித்தார்..
ஏற்கனவே 80 லட்சம் e-Passport
இதுவரை இந்தியாவில் 80 லட்சம் இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் 60,000 இ-பாஸ்போர்ட்கள் வழங்கியுள்ளன. பாஸ்போர்ட் சேவையை எளிதில் பெறச் செய்ய, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் Passport Seva Kendra அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 511 தொகுதிகளில் மையங்கள் உள்ளன; மீதமுள்ள 32 தொகுதிகளிலும் விரைவில் திறக்கப்பட இருக்கின்றன.
பாஸ்போர்ட் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பாஸ்போர்ட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இப்போது அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 1.5 கோடி (15 மில்லியன்) பாஸ்போர்ட்டுகளாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடுமாறு, பாஸ்போர்ட் தொடர்பான தகவல்கள் 17 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன.
Read More : வாடகைதாரர்கள் கவனத்திற்கு..! அரசின் புதிய சட்டம்.. இந்த விதிகளை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!



