இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பயங்கரவாதத்தையும் அதற்கு ஆதரவளிப்பவர்களையும் எதிர்க்க இந்தியாவும் இஸ்ரேலும் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றன என்றும், இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை என்பதில் இரு நாடுகளும் தெளிவாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த ஒற்றுமை இரு நாடுகளின் உறவின் முக்கிய அடையாளம் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலில் UPI பயன்பாட்டுக்கு ஒப்பந்தம்
இந்தச் சந்திப்பில், இஸ்ரேலில் UPI (Unified Payments Interface) பயன்படுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (FTA) விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நீண்ட காலமாக உள்ள நம் உறவை ‘சிறப்பு மூலோபாய கூட்டாண்மை’ என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளோம். இது இரு நாடுகளின் மக்களின் ஆசைகளின் பிரதிபலிப்பு,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இஸ்ரேலில் தனக்கும் தனது குழுவிற்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “ ஒன்பது ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக இஸ்ரேல் வர வாய்ப்பு கிடைத்தது. இப்போது மீண்டும் வருவது பெருமை. நேற்று ‘க்னெஸெட் ஸ்பீக்கர் பதக்கம்’ வழங்கப்பட்டது. அந்த மரியாதையை 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா–இஸ்ரேல் நட்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்,” என்றார்.
நேதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை
இதற்கு முன்னர், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டது. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை பற்றியும் ஆலோசனை நடந்தது.
இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) மற்றும் I2U2 (இந்தியா–இஸ்ரேல்–யுஏஇ–அமெரிக்கா) கூட்டமைப்பின் கீழ் ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பும் விவாதித்தன.
இஸ்ரேல் அதிபருடன் சந்திப்பு
நேதன்யாகுவுடன் பேச்சுவார்த்தைக்கு முன், பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஐ சந்தித்தார். கல்வி, ஸ்டார்ட்-அப்கள், புதுமை, தொழில்நுட்பம், இணைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்தனர் என்று வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பயணம்
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை இஸ்ரேல் வந்தார். இது அவரது இரண்டாவது இஸ்ரேல் பயணம். 2017 ஜூலை மாதத்தில் நடைபெற்ற முதல் பயணத்தின் போது, இந்தியா–இஸ்ரேல் உறவு ‘மூலோபாய கூட்டாண்மை’ என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
இந்தியா–இஸ்ரேல் வலுவான கூட்டாண்மை
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, விவசாயம், நீர் மேலாண்மை, மக்கள்-மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் உறவு மேலும் வலுப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பல்வேறு ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. இதனால் பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்த உறவின் முக்கிய தூணாக மாறியுள்ளது. வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. சமீபத்தில், இந்தியா–இஸ்ரேல் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அடிப்படை விதிமுறைகள் கையெழுத்தாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Read More : கேஸ் சிலிண்டர்கள் பயனர்களுக்கு கடைசி வாய்ப்பு..! இதை செய்யாவிட்டால் பணம் குறையும்.. இதுவே கடைசி நாள்..!



