ஸ்டார்ட்அப்பில் இன்டர்ன்ஷிப்பிற்காக இந்தியாவில் இருந்து ஜெர்மனி குடிபெயர்ந்த காஜல் டெக்வானி என்ற பெண், இரண்டு நாளில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, ஸ்டார்ட்அப் இன்டர்ன்ஷிப்பிற்காக அவர் பல நேர்காணல்கள் மற்றும் பொறுப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். பிற இரண்டு வேலை வாய்ப்புகளை நிராகரித்து இந்த இன்டர்ன்ஷிப்பை தேர்ந்தெடுத்தார். ஜெர்மனியில் மியூனிக் நகரத்தில் குடிபெயர்ந்தார். ஆகஸ்ட் 15 முதல் பணியில் சேர்ந்தார்.
ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாக இருந்தபோதிலும், முதல் நாள் பணிக்கு சேர்ந்த போதே எதிர்பாராத விமர்சனங்கள் தொடங்கின. குழுவிற்கு பொருத்தமில்லை, அதிக அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட ஒருவரை எதிர்பார்த்தனர், தாமதமாக வருகிறார் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது நாளில் கண்ணில் தொற்று காரணமாக சில நிமிடங்கள் தாமதமாக வந்த டெக்வானி, அன்றைய தினம் மாலை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த இடம்பெயர்வு நிதி மற்றும் மன ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என டெக்வானி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் டெக்வானி கூறுகையில், “ஸ்டார்ட்அப்பிற்கு உடனடியாக இடம்பெயராதீர்கள், குறிப்பாக ஊதியம் குறைவாக இருந்தால்.. இது நிதி மற்றும் மன ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்றார்.
அவரது வீடியோ வைரலான நிலையில், பலர் இதே போன்ற அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர் எனக்கும் இதுதான் நடந்தது என்றார். இரண்டாவது பயனர் PhD நேர்காணலில் வெற்றி பெற்று இடம்பெயர்ந்தேன், ஒரு மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டேன். ஆனால் அதிர்ஷட வசமாக சில நாட்களிலே வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது எனக் கூறினார்.
Read more: இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!. எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் சில வார்த்தைகள் எவை?



