26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை நடந்த 3வது நாள் போட்டிகளில் இந்தியா பதக்க வேட்டை நடத்தியது. ஜோதி யர்ராஜி, அவினாஷ் சேபிள் இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர். மகளிர் 4×400 மீட்டர் ரிலே அணியும் தங்கம் வென்றது.
ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் 8:20.92 வினாடிகளில் வெற்றி பெற்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்தப் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. ஹர்பல் சிங் (1975) மற்றும் தினா ராம் (1989) ஆகியோருக்குப் பிறகு ஆண்கள் ஸ்டீபிள்சேஸில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் சேபிள். “நான் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்,” என்று சேபிள் கூறினார். செப்டம்பரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பிலும் சேபிள் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
மகளிர் 100 மீட்டர் ஹர்டில்ஸில் ஜோதி யர்ராஜி 12.96 வினாடிகளில் புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் தங்கத்தை வென்றார். சீனாவின் சூ யிப்பிங்கின் 2000ஆம் ஆண்டு சாதனையான 12.99 வினாடிகளை முறியடித்தார். “இது ஒரு நல்ல நாள். இந்த சீசனில் 13 வினாடியில் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி,” என்று ஜோதி தனது வெற்றிக்குப் பிறகு கூறினார்.
மகளிர் 4×400 மீட்டர் ரிலே அணியில் ஜிஸ்னா மேத்யூ, ரூபல் சவுத்ரி, குஞ்சா ராஜிதா மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சிறப்பான தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த அணி 3:34.18 வினாடிகளில் சீசனின் சிறந்த நேரத்தைப் பதிவு செய்து தங்கத்தை வென்றது. வியட்நாம் (3:34.77 வினாடிகள்) மற்றும் ஸ்ரீலங்கா (3:36.67 வினாடிகள்) அணிகளை முந்தியது. 2013க்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த 10வது தங்கம் இது. ரூபலுக்கு இந்த சாம்பியன்ஷிப்பில் கிடைத்த மூன்றாவது பதக்கம் இது. கலப்பு அணியில் தங்கம் மற்றும் 400 மீட்டரில் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். கலப்பு ரிலேயில் தங்கம் வென்ற சுபாவுக்கு இது இரண்டாவது தங்கம்.
ஆண்கள் 4×400 மீட்டர் ரிலேயில் ஜெய் குமார், தர்மவீர் சவுத்ரி, மனு தெக்கினாலில் சாஜி மற்றும் விஷால் டிகே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3:03.67 வினாடிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது. கத்தார் 3:03.52 வினாடிகளில் தங்கம் வென்றது. சீனா 3:03.73 வினாடிகளில் வெண்கலம் வென்றது.
மகளிர் நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது. அன்சி சோஜன் எடப்பில்லி 6.33 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும், ஷைலி சிங் 6.30 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஈரமான தடத்தால் ஷைலி சரியாகச் செயல்படவில்லை. ஈரானின் ரெய்ஹானே மொபினி அரானி 6.40 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.
மகளிர் 10,000 மீட்டர் இறுதிப் போட்டியில் சஞ்சீவனி ஜாதவ் 33:08.17 வினாடிகளில் ஐந்தாவது இடத்தையும், சீமா 33:08.23 வினாடிகளில் ஆறாவது இடத்தையும் பிடித்தனர். கஜகஸ்தானின் டெய்சி ஜெப்கெமெய் 30:48.44 வினாடிகளில் தங்கம் வென்றார்.
வியாழக்கிழமை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 12 தங்கப் பதக்கங்கள் உட்பட 21 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
Readmore: இன்று வெள்ளிக்கிழமை..!! இந்த மந்திரத்தை சொன்னால் மகாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்..!!