இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
டி20 தொடரின் முதல் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்து ஷெஃபாலி வர்மாவுடன் இணைந்து 77 ரன்கள் எடுத்தார்.ஷெஃபாலி வர்மா வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். ஸ்மிருதி 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார், அதில் அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் ஹர்மன்ப்ரீத்துக்கு அடுத்ததாக சதம் விளாசிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி படைத்துள்ளார். மகளிர் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதங்களில் இது 4-வது இடத்தில் உள்ளது. ஹர்லீன் தியோல் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இந்தியாவின் ஸ்கோரை 210 ஆக உயர்த்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார்.
211 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது இங்கிலாந்து அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீராங்கனைகள் இருவரும் 9 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன. இங்கிலாந்து அணியின் 3 பேட்ஸ்மேன்களால் மட்டுமே ரன்களின் அடிப்படையில் இரட்டை இலக்கத்தை எட்ட முடிந்தது. கேப்டன் பிரண்ட் 66 ரன்கள் எடுத்தார், இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.