நாளைய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிறு சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கான நம்பிக்கை விளக்காகத் திகழ்கின்றன. அத்தகைய திட்டங்களில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) விளங்குகிறது. இது வெறும் முதலீட்டு திட்டமாக மட்டுமல்ல; குறைந்த வருமானத்திலும், குறுகிய சேமிப்பிலும், நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் பொருளாதார கருவியாகவும் பார்க்கப்படுகிறது.
PPF கணக்கின் அடிப்படை முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை இரண்டு கட்டங்களில் தலா 5 ஆண்டுகளாக நீட்டிக்கலாம். இதன் மூலம், மொத்தம் 25 ஆண்டுகள் வரை சேமிப்பை தொடர முடிகிறது. இந்த நீண்டகால அமைப்பே, ஓய்வூதியத்துக்குப் பிறகான வாழ்க்கையை நிதிநிலையோடு எதிர்கொள்ள உதவும் முக்கிய அம்சமாகும். பலருக்கு ஓய்வு என்பது வாழ்வின் நிச்சயமற்ற கட்டமாக இருப்பதால், இப்படியான திட்டங்கள் மனநிம்மதியையும் நிதி பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் வழங்குகின்றன.
மாதம் ரூ.3,000 என்ற அளவிலான சிறிய சேமிப்பே இருந்தாலும், 25 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.24 லட்சம் வரை தொகை சேர முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இதில் உண்மையான முதலீடு ரூ.9 லட்சம் மட்டுமே; ஆனால் வட்டி வருமானம் ரூ.14.77 லட்சம் வரை உயர்வது, நீண்டகால சேமிப்பின் பலனை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வருமான வரி சட்டத்தின் 80C பிரிவு கீழ் முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு, வட்டிக்கும் வரி இல்லை, முதிர்வு தொகைக்கும் வரி இல்லை என, முழுமையாக EEE (Exempt–Exempt–Exempt) பிரிவில் உள்ள சில அரிய முதலீட்டு திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
முக்கியமாக, பங்கு சந்தை போன்ற ஏற்றத் தாழ்வுகளும், முதலீட்டு ஆபத்துகளும் இதில் இல்லை. அரசு ஆதரவுடன் இயங்கும் திட்டம் என்பதால், மூலதன பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படுகிறது. ஆடம்பரச் செலவுகளுக்கு நடுவே சேமிப்பை மறக்காமல், திட்டமிட்ட நிதி பழக்கத்தை வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ளும் போது, ஓய்வுக்காலம் ஒரு அச்சமாக அல்ல; ஒரு நிம்மதியான புதியத் தொடக்கமாக மாறும்.
Read more: Karthigai Recipe: திருநெல்வேலி ஃபேமஸ் பனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி..?



