ChatGPT-யை விட மிக திறன் வாய்ந்த ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய Bing and Edge ப்ரெளசரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. இதேபோல் கடந்த வாரத்தில் chat.openai.com என்ற இணையதளம், தினசரி 2.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இந்தநிலையில், சாட்ஜிபிடி-யை அடிப்படையாக கொண்டு, மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய Bing and Edge ப்ரெளசரை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பிங் அண்ட் எட்ஜ் ப்ரெளசர், சாட்ஜிபிடியை விட மிக திறன் வாய்ந்ததாக இருக்கும் எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மீள் உருவாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ப்ரௌசர்கள், தகவல்களை தேடுவதில் புதிய புரட்சியாக இந்த மீள் உருவாக்கம் இருக்கும் எனவும் இதில் சாட் வசதியும் உள்ளது எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.