ஈரான் போர் பதற்றம்.. துபாயில் அதிக தள்ளுபடியில் தங்கம் விற்பனை..! இந்தியாவில் என்ன தாக்கம் ஏற்படும்?

gold war

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகளாவிய பொருட்கள் சந்தைகளிலும் தெரிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரானைச் சுற்றியுள்ள பிரச்சினை தீவிரமாகும் நிலையில், சர்வதேச தங்க வர்த்தக மையமாக இருக்கும் துபாயில் தங்கம் தற்போது தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதற்குக் காரணம் போக்குவரத்து தடைகள் மற்றும் தங்கத்திற்கு இருக்கும் தேவை குறைந்திருப்பது ஆகும்.


துபாய், பெரிய அளவிலான தங்க வர்த்தக சந்தையைக் கொண்டதால் “தங்க நகரம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக துபாயில் தங்கம் இந்தியாவைவிட குறைந்த விலையில் விற்கப்படும். அதற்கு முக்கிய காரணம் அங்கு இறக்குமதி வரி மற்றும் பிற வரிகள் குறைவாக இருப்பதுதான். ஆனால் தற்போது அந்த பகுதியில் போர் அச்சுறுத்தல் அதிகரித்ததால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தை மற்ற நாடுகளுக்கு அனுப்புவது மிகவும் மந்தமாகியுள்ளது. இதன் காரணமாக துபாயில் உள்ள பல தங்க வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விரைவாக விற்பதற்காக தள்ளுபடி விலையில் விற்று வருகின்றனர்.

இந்த தங்க விலை மாற்றங்கள் உலகில் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்துள்ளன.

மேலும் தங்கம் வாங்கும் போது விதிக்கப்படும் வரியும் குறைவாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தங்கம் வாங்கும் போது சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை விதிக்கப்படுகின்றன.

துபாயின் தங்க சந்தை மிகப்பெரியது மற்றும் கடுமையான போட்டியுடன் செயல்படுகிறது. அதிக அளவில் தங்க வர்த்தகம் நடைபெறுவதால் துபாயில் தங்கத்தின் கூடுதல் விலை மிகவும் குறைவாக இருக்கும். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் சர்வதேச வாங்குபவர்களுக்கும் துபாய் மிகவும் கவர்ச்சிகரமான தங்க சந்தையாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

ஈரான் மற்றும் சவுதி அரேபியாவின் பல விமான நிலையங்கள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. இதனால் தங்கத்தை விமானம் மூலம் கொண்டு செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. கடல் வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்தும் தற்போது மந்தமாகியுள்ளது.

இதன் காரணமாக துபாயில் உள்ள தங்க வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் தங்கள் கையிருப்பை விற்பதற்காக தள்ளுபடி விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்க விலை உயர்ந்து வருகிறது. காரணம், அரசியல் மற்றும் போர் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகள் உருவாகும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்கின்றனர்… பொதுவாக உலகில் எந்த பெரிய நெருக்கடியும் ஏற்பட்டால் தங்க விலை அதிகரிக்கும். ஆனால் துபாயில் தற்போது அதற்கு மாறாக தங்க விலை குறைந்து வருகிறது. காரணம், வியாபாரிகள் தங்கள் தங்கத்தை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருப்பது.

இந்தியாவில் தங்கத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய பெரும்பாலும் இறக்குமதியை தான் நம்புகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்தின் ஒரு பெரிய பகுதி துபாய் வழியாகவே வருகிறது. எனவே இந்த மோதலால் தங்க விநியோகத்தில் ஏற்படும் எந்த தாமதமும் இந்தியாவை நேரடியாக பாதிக்கும்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினத் தொழில்துறையில் தங்க விநியோகத்தில் சிக்கல் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்கம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் இந்தியாவில் தங்க விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் இந்தியாவில் திருமண காலம் மற்றும் முக்கிய திருவிழாக்கள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அந்த நேரத்தில் தங்க விலை மேலும் உயர்ந்தால், நுகர்வோர் தேவையும் பாதிக்கப்படும்.

தங்க விலைகளில் ஏற்பட்டுள்ள அதிக ஏற்ற இறக்கங்களால் இந்தியாவில் ஏற்கனவே தங்கத்தின் சில்லறை வாங்குதல் குறைந்துள்ளது. விலை நிலையான நிலைக்கு வரும் வரை பல வாங்குபவர்கள் காத்திருக்கிறார்கள்.

மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை இன்னும் சில காலம் உலக செய்திகளில் முக்கியமாக இருக்கும். இந்த மோதல் மேலும் தீவிரமானால், அது தங்கம் மட்டும் அல்லாமல் எண்ணெய், நாணயங்கள், பங்குகள் மற்றும் கடன் சந்தைகள் போன்ற உலகளாவிய விநியோக சங்கிலிகளையும் பாதிக்கக்கூடும்.

இதனால் வணிகர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நிலைமையை கவனித்து வருகின்றனர். இந்திய நுகர்வோருக்கு துபாயில் தங்க விலை குறைவாக இருப்பது கவர்ச்சியாக தோன்றலாம். ஆனால் ஈரானுடன் நடைபெறும் இந்த மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால், இந்தியாவுக்கு தங்க விநியோகம் பாதிக்கப்படலாம். அதன் விளைவாக இந்தியாவில் தங்க விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

RUPA

Next Post

‘வருந்துகிறோம்’: அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான்.. ஆனால் எதிரிகளிடம் சரணடையை மாட்டோம் என திட்டவட்டம்..!

Sat Mar 7 , 2026
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் இன்று அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.. மேலும், ஈரானின் இடைக்கால தலைமைக்குழு எடுத்த முக்கிய முடிவை அவர் அறிவித்தார். அதன்படி, ஈரான் மீது தாக்குதல் அந்த அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து தொடங்காத வரை, அந்த நாடுகளுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அல்லது வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளாது […]
Iran Israel 3

You May Like