சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி கே.ஏ.அருண்ராஜ், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 22 ஆம் தேதி அவர் விருப்ப ஓய்வு பெற்றதும், இன்று பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ், மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 2009-ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று இந்திய வருமானவரி சேவையில் (IRS) சேர்ந்தார். சேவையிலேயே இருந்தபோது அரசியலுக்கான ஆர்வமும் அவருக்கு வளர்ந்ததாகக் கூறப்படுகிறது.
2020-ல் விஜய் சில சிக்கல்களை சந்தித்தபோது, அவருக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டியவர் அருண்ராஜ் தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் இருவருக்குமிடையேயான நட்பு வலுத்துள்ளது. விஜய் கட்சி தொடங்கிய பிறகு, கொள்கை அமைப்பிலிருந்து மாநாட்டு திட்டங்கள் வரை அருண்ராஜ் பங்கு பெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி தவெகவில் இணையவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மயிலாப்பூரைச் சேர்ந்த இவர், ஓ.பி.எஸ் அணியில் இருந்தவர். பின்னர் பா.ஜ.கவில் இணைந்த இவர், தற்போது பா.ஜ.கவிலிருந்து விலகி தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பனையூர் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதேபோல தவெகவில் இணையும் மேலும் சில பிரமுகர்கள் விவரங்களும் வெளியாகி உள்ளன. திமுகவைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன் (1996-2011) அண்மை காலமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்யுடன் நீண்டகாலம் தொடர்பில் இருந்து வருகிறார். அவர் இன்று திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார்,
அதிமுகவைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன் (1991-1996), ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையில் இருக்கக் கூடிய டாக்டர் மரிய வில்சன் ஆகியோரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Read more: மும்பை ரயில் விபத்து: புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் 6 பேர் பலியான சோகம்.. பலர் காயம்..