மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தை கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில், படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டுமென கமல்ஹாசன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், ”தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா..? கமலின் இந்த பேச்சு கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது. எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியில் இருந்து பிறந்தது கிடையாது. ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன..? மன்னிப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது..? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கமல்ஹாசன் 30.05.2025 அன்று கர்நாடக திரைத்துறை சம்மேளன தலைவருக்கு எழுதிய கடிதத்தை நீதிபதி முன் படித்து காட்டினார். அதில் என்னுடய (கமல்) பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”ஒரு மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுக்கிறதா..? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், பிரச்சனையை தீர்த்துவிட்டு கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம், கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.