குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதம் இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான். தம்பதிகள் பிரிந்ததால் மகன், தந்தையோடு வசித்து வருகிறான். இந்நிலையில் ஜெயசித்ரா, சமீபத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது 10 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி, கடந்த 31ஆம் தேதி மனுதாரர் மகன் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு உள்ளது என்றார். இதுதொடர்பான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் 10 வயது மகன் அவரது தந்தையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார். தந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதமாக கருத முடியாது. எனவே, இந்த வழக்கில் இந்த கோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மனுதாரர் தனது மகனை சந்திக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட கீழ்கோர்ட்டில் முறையிடலாம் என்று அந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர்.
இந்து மைனாரிட்டி மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956… இந்து மைனாரிட்டி மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 இன் கீழ் 5 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு தாய் மட்டுமே நேரடி மற்றும் இயற்கையான பாதுகாவலர் என்று வரையறுத்துள்ளது. அதன் பின்னர் பெற்றோர்கள் பிரிந்தால், இரண்டு பெற்றோரில் யாரிடம் வேண்டுமானாலும் குழந்தை வளரலாம். இது சட்டவிரோதமானது அல்ல சட்டம் என்று கூறுகிறது.