நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், இந்த வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாலை நேரில் ஆஜரான மாஜிஸ்திரேட்டிடம், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை..? அதில் என்ன சிக்கல் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாஜிஸ்திரேட், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், அதை காவல்துறையினர் திருப்பி அளித்துவிட்டதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, காவல்துறையினர் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தையாக்குகிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் “ பாதிக்கப்பட்ட பெண்ணை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள்.. குற்றவாளிகளை கூட நீங்கள் துன்புறுத்துவதில்லை.. மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டோரை காவல்துறையினர் அருவருக்கத்தக்க வகையில் நடத்துகிறார்கள். சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து காவல் துறை தெனாவட்டாக செயல்படுகிறது.
சட்டத்தின் படி, செயல்படாமல் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்று காவல்துறையினர் செயல்படுகின்றனர். இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? அரசும் காவல்துறைக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று.. இதுபோன்று செயல்பட கூடிய காவல்துறையை பணிநீக்கம் செய்து நேரடியாக நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.