இன்றைய வேகமான கார்ப்பரேட் உலகில், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் தங்கி உழைப்பது என்பது புத்திசாலித்தனமான முடிவா அல்லது பொருளாதார இழப்பா என்ற விவாதம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முந்தைய காலங்களில், ஒரே அலுவலகத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிவது ஒரு பெருமையாக கருதப்பட்டது. ஆனால், தற்போதைய இந்திய வேலைவாய்ப்பு சந்தையில், ஒரு நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பதை விட, அடிக்கடி வேலை மாறுபவர்களே அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என்ற கசப்பான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பல ஆண்டுகளாக தங்களது உழைப்பை தந்த பழைய ஊழியர்களிடையே ஒருவிதமான ஏமாற்றத்தையும், மன உழைச்சலையும் உருவாக்கியுள்ளது.
ஒரு ஊழியர் நிறுவனத்திலேயே தொடரும்போது, அவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு என்பது 8 முதல் 10 சதவீதத்திற்குள்ளேயே முடங்கிவிடுகிறது. இது விலைவாசி உயர்விற்கு ஈடுகொடுக்கவே போதுமானதாக இருப்பதில்லை. ஆனால், அதே பதவிக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நபரை வேலைக்கு எடுக்கும்போது, சந்தை மதிப்பை காரணம் காட்டி அவருக்கு 20 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் வழங்க நிறுவனங்கள் தயங்குவதில்லை. இதனால், தங்களுக்குக் கீழே வேலைக்குச் சேரும் ஜூனியர் ஊழியர்கள், தங்களை விட அதிக சம்பளம் வாங்குவதை நேரில் காணும் சீனியர் ஊழியர்கள், தங்களது விசுவாசம் கேலிக்குரியதாக மாற்றப்படுவதாக உணர்கிறார்கள்.
நிறுவனங்கள் ஏன் இப்படி செய்கின்றன என்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பட்ஜெட் என்ற பெயரில் நிலவும் பாரபட்சமே முதன்மையானது. பழைய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும்போது அந்த நிறுவனத்தின் உள்விதிமுறைகள் தடையாக இருப்பதாக கூறும் நிர்வாகம், புதிய திறமையாளர்களை ஈர்க்கும்போது மட்டும் தாராளமாக பணத்தை வாரி வழங்குகிறது. குறிப்பாக ஐடி, வங்கி மற்றும் டிஜிட்டல் துறைகளில் இந்த ஊதியப் பாகுபாடு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தில் இருக்கிறது. “நாங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தோம், ஆனால் எங்களுக்குக் கிடைப்பது வெறும் கைதட்டல் மட்டுமே; புதியவர்களுக்கு கிடைப்பதோ பெரும் பணம்” என்பதே பல ஊழியர்களின் வேதனையாக இருக்கிறது.
இந்த சூழல் ஊழியர்களின் மனநிலையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளைஞர்கள் வேலையை ஒரு வாழ்வாதாரமாக பார்ப்பதை விட, ஒரு முதலீடாகவே பார்க்கிறார்கள். ஒரு இடத்தில் வளர்ச்சி தேங்கும்போது, அடுத்த இடத்திற்கு தாவுவதே சரியான நிதி மேலாண்மை என்று அவர்கள் கருதுகிறார்கள். விசுவாசம் என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும்; நிறுவனம் ஊழியரின் உழைப்பிற்கு ஏற்ற சந்தை மதிப்பிலான ஊதியத்தை தரத் தவறும்போது, ஊழியர் தனது வளர்ச்சியை தேடி வெளியேறுவதில் தவறில்லை என்ற மனநிலை ஆழமாக வேரூன்றிவிட்டது. இறுதியில், “விசுவாசமாக இருப்பது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறதா?” என்ற கேள்விதான் இன்று ஒவ்வொரு ஊழியரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.



