10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள்.
இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பதாகைகள் இருக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் புறப்பட்டு மாமல்லபுரத்தில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வந்தார். விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிற்குள் நுழைந்த விஜய், அங்கு முன்பகுதியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் சிறிதுநேரம் உரையாடினார். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் உரையாடினார்.
அவர் பேசுகையில், நீட் தேர்வு மட்டும் உலகம் அல்ல.. நீட் தேர்வை தாண்டி பல விஷயங்கள் உள்ளது. படிப்பை நினைத்து பதற்றம் அடையாதீர்கள். அனைவரும் ஜன நாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். அடுத்த தேர்தலுக்கு வண்டி வண்டியா கொண்டு வந்து காச கொட்டுவார்கள். அந்த பணம் எல்லாமே உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம் தான்.
இன்றைய இளைஞர்கள் ஜாதி மதம் கடந்து செயல்பட வேண்டும். விவசாயிகள் ஜாதி பார்த்து பொருட்களை உற்பத்தி செய்யவில்லை.. வியாபாரிகள் ஜாதி பார்த்து பொருட்களை விற்பனை செய்வதில்லை.. நாம் மட்டும் ஏன் ஜாதி பார்க்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் தந்தை பெரியாருக்கே ஜாதி சாயம் பூச முயற்சி செய்யும்படி கேள்விகளை கேட்கிறார்கள் என்றார்.
Read more: நகை அடமானத்திற்கான புதிய விதிகள் 2026 வரை ஒத்திவைப்பு..!! – RBI அறிவிப்பு