பாமகவில் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு இன்று மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன்.
இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்? மைக்கை தூக்கி தலையில் போடுவதை போல அன்புமணி செயல்பட்டார். அம்புமணி தலைமை பண்பு இல்லாதவர்.
வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது. கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அன்புமணி செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். அதற்கு உண்டான விளக்கம் அளிப்பது என் கடமையாகும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், பாஜகவுடன் தான் கூட்டணி என்று கூறி அமைத்தவர் அன்புமணி” என்றார்.
மகன் அன்புமணி மீது பாமக தலைவர் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைவர் பதவியில் ராமதாஸும், அன்புமணியும் உறுதியாக இருப்பதால் பாமக 2 ஆக உடைவது உறுதி என கூறப்படுகிரது. அப்படி உடையும் பட்சத்தில் ராமதாஸ் பக்கம் ஜிகே மணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், அன்புமணி பக்கம் இளம் தலைவர்களும் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே அன்புமணி தலைமையில் சோழிங்க நல்லூரில் நாளை பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.