ஆவினில் பால் தட்டுப்பாடு என்பது தவறான தகவல் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் ஆவின் பால் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் ஒன்று செய்திருந்தார். அதில், ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனவும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் ஆரஞ்சு நிற பாலின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் நாசர், ”ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனும் கருத்தில் உண்மை இல்லை. மாறாக பால் விற்பனை அதிகரித்துள்ளது தான் உண்மை. தேவைக்கேற்ப பூர்த்தி செய்யும் வகையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரீம் பால் லிட்டருக்கு ரூ.12 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களில் ரூ.70-க்கு விற்கப்படும் நிலையில், ஆவினில் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்தபட்சமாக ரூ.10 ஆவின் பால் குறைவானதே. அதுவும் அட்டைதாரர்களுக்கு ரூ.46 என்ற விலையில் தான் தற்போது வரை விநியோகம் செய்யப்படுகிறது. வாணிப நோக்கு விற்பனைக்கு மட்டுமே ரூ.60 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய நீல நிறம் மற்றும் பச்சை நிற பால் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் குறைக்கப்பட்ட விலையிலேயே விநியோகித்து வருகிறோம்” என்றார்.