இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டதாகவும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவைப் போலவே இருக்கும். இப்போதே அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் என்னிடம் பேசும்போது, அமெரிக்காவை விட இந்திய சாலை உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகின்றனர். நாம் ஏற்றுமதியை உயர்த்தினால் தான், விவசாயத்துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை உட்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்த முடியும்.
இந்தியாவில் தளவாடச் செலவு 16% ஆக இருந்தது. மேம்பட்ட சாலைகள் மூலம், மத்திய பாஜக அரசு தளவாடச் செலவுகளை 9%ஆக குறைத்துள்ளது. இந்தியாவில் தற்போது, 25 பசுமை வழி விரைவுச் சாலைகள், 3,000 கிலோ மீட்டர் துறைமுக இணைப்பு நெடுஞ்சாலைகள், ஆன்மிக சுற்றுலாத் தலங்களை இணைக்கக் கூடிய சாலைகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றனர்.
ஜம்மு – ஸ்ரீநகருக்கு இடையே 36 சுரங்கப்பாதைகளை உருவாக்கி வருகிறோம். இதில், 23 சுரங்கப்பாதைகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 5 சுரங்கப் பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்றார்.