தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி காலை 10 மணி தொடங்கவிருந்த நிலையில், மாணவ – மாணவிகள் அனைவரும் வெயிலில் காத்திருந்தனர். ஆனால், காலை 10.30 மணிக்கு அமைச்சர் தாமோதரன் பள்ளிக்கு வந்தார்.
அந்த சமயத்தில், பள்ளியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நிகழ்ச்சி மேடைக்கு வராமல் சுமார் 20 நிமிடங்களாக பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அமைச்சர் காத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வந்த பின்னும் மின்சாரம் வராததால் அவரும் தலைமை ஆசிரியர் அலுவலகத்திலேயே காத்திருந்தார். பின்னர், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து, மின்சாரம் வழங்கப்படும்.
இதையடுத்து, அமைச்சரும், ஆட்சியரும் விழா மேடைக்கு வந்த நிலையில், கொடியேற்று நிகழ்வும் நடைபெற்றது. அப்பொழுது அமைச்சர் தா.மோ அன்பரசனும், ஆட்சியரும் தேசிய கொடியை ஏற்றிவிட்டு அதனை கவனிக்காமல் கூட வணக்கம் வைத்துவிட்டு சென்றனர். தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் தான், கொடி தலைகீழாக இருந்ததை கவனித்தனர். பின்னர், உடனடியாக அங்கிருந்த ஆசிரிய பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையே, கொடி பாட்டும் பாடி முடிக்கப்பட்டது .
கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய பாட்டை, கொடியை சரி செய்து கொண்டிருக்கும்போது பாடப்பட்டதும், கொடியை தலைகீழாக அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஏற்றியதும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.