தமிழகத்தில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசுச் சேவைகளுக்கும் நுழைவுச்சீட்டாக திகழ்வது பிறப்புச் சான்றிதழ் ஆகும். பள்ளிச் சேர்க்கை முதல் பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்திற்கும் இதுவே பிரதான ஆவணம். ஆனால், பல குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்தாலும், உரிய நேரத்தில் பெயரை சேர்க்காமல் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற பொதுவான குறிப்புடன் மட்டுமே சான்றிதழை வைத்திருப்பதை ஒரு அலட்சியப் போக்காக கொண்டுள்ளனர். இத்தகைய பெயரற்ற சான்றிதழ்கள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும் என்றும், வருங்காலத்தில் இவை செல்லுபடியாகாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.
சாதாரண நடைமுறைப்படி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பெயர் பதிவது எளிதானது. ஒருவேளை தவறினால், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அபராத கட்டணத்துடன் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், 15 ஆண்டுகளையும் கடந்து பெயரிடப்படாமல் இருக்கும் சான்றிதழ்களில் பெயர் சேர்ப்பது நீண்டகாலமாக பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, 15 ஆண்டுகள் கடந்த சான்றிதழ்களிலும் இப்போது பெயரைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், வரும் 2026 செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகப் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டவர்கள், தங்களின் மண்டல அலுவலகங்களிலேயே இந்தப் பணியை முடித்துக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு, பிறப்புச் சான்றிதழை நாட்டின் ஒற்றை அடையாள ஆவணமாக மாற்ற திட்டமிட்டுள்ள சூழலில், இந்தப் பெயர் சேர்க்கை என்பது தனிநபரின் சட்டப்பூர்வமான பாதுகாப்புடன் தொடர்புடையது. 2026-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் காலக்கெடு முடிந்துவிட்டால், அதன் பிறகு பெயரற்ற சான்றிதழ்களில் மாற்றம் செய்வது இயலாத காரியமாகிவிடும். எனவே, உங்கள் அல்லது உங்கள் குழந்தைகளின் சான்றிதழில் பெயர் விடுபட்டிருந்தால், அதனைச் சரி செய்ய இதுவே கடைசித் தருணம் என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டியது அவசியமாகும்.



