சென்னை அசோக் நகர் 4-வது பிரதான சாலையில் நேற்றைய தினம் ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் இளைஞர் ஒருவரும், அவரது பெண் தோழியும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென காரின் கதவைத் திறந்து அந்த இளைஞரை வெளியே இழுத்துப் போட்டு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் அவரது மார்பில் சரமாரியாகக் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (38) என்றும், அவர் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வந்த ஒப்பந்ததாரர் என்பதும் தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வந்தவாசி மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் போக்குவரத்து துறையில் பணியாற்றும் தனஞ்செழியன் (42), அவரது மனைவி சுகன்யா (37), மற்றும் சுகன்யாவின் தோழி குணசுந்தரி (27) என்பது தெரியவந்தது.
விசாரணையில், இந்தக் கொடூரக் கொலைக்கு கள்ளக்காதல் தான் காரணம் என்பது தெரியவந்தது. கொலையான பிரகாஷும், சுகன்யாவும் பள்ளிப் பருவ நண்பர்கள். இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சுகன்யாவின் பெற்றோரின் எதிர்ப்பால், சுகன்யாவுக்கு தனஞ்செழியனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும், சுகன்யா தனது பழைய காதலரான பிரகாஷுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவன் தனஞ்செழியனுக்குத் தெரியவர, அவர் பலமுறை மனைவியைக் கண்டித்துள்ளார். இதற்கிடையில், தனஞ்செழியன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், சுகன்யா அவரைப் பிரிந்து புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தக் கால இடைவெளியில், பிரகாஷும் சுகன்யாவும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், டெண்டர் விஷயமாக பிரகாஷ், சுகன்யாவுடன் நேற்று சென்னைக்கு வந்துள்ளார். அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தத் தகவலை சுகன்யாவின் தோழியான குணசுந்தரி, தனஞ்செழியனுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த தனஞ்செழியன், தனது நண்பர்கள் மூவர் மற்றும் தகவல் கொடுத்த குணசுந்தரி ஆகியோருடன் அசோக் நகருக்கு விரைந்து வந்துள்ளார்.
அங்கு பிரகாஷும், சுகன்யாவும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த தனஞ்செழியனும் அவரது நண்பர்களும் சேர்ந்து பிரகாஷை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, தனஞ்செழியன் தனது மனைவி சுகன்யாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தில் கைதான 3 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனஞ்செழியனுடன் வந்த தலைமறைவாக உள்ள மற்ற 3 நண்பர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



