ஈரானில் உள்ள டஜன் கணக்கான இராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் ஆதரவு தெரிவித்தது. மேலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, ஹவுதி பயங்கரவாத அமைப்புகளும், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தின. ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி தொடர்பான ரகசியங்களை திருடியுள்ளதாக ஈரான் சமீபத்தில் கூறியது.
இதற்கிடையே, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணுசக்தி தொடர்பான பேச்சு நடந்து வந்தது. ஐந்து சுற்று பேச்சு நடந்த நிலையில், ‘உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார், அணுசக்தி ஒப்பந்தத்தில் நல்ல முடிவு ஏற்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதுபோலவே, அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என, இஸ்ரேல் கூறியிருந்தது.
அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளநிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலை நடத்தியது. தெஹ்ரானில் பல குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வருவதால், அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் டஜன் கணக்கான இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய விமானப்படை (IAF) ஈரான் மீது துல்லியமான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இது 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாகும். இந்த தாக்குதலில் ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம், பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டு மையம் மற்றும் முக்கிய அணு விஞ்ஞானிகள் குறிவைக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையில், ஈரானின் அணுசக்தி தளத்தை நாங்கள் தாக்கியுள்ளோம் என்று கூறினார். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல் முடியும் வரை இந்த பிரச்சாரம் தொடரும். இது இஸ்ரேலின் இருப்பைப் பாதுகாப்பதற்காகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு செய்திக்குறிப்பில், இந்தத் தாக்குதல் தற்காப்புக்காக அவசியம் என்று இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்ததாகக் கூறினார். இந்த நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான முன்னுரிமை. ஈரான் அமெரிக்க வீரர்களை குறிவைக்கக் கூடாது. இஸ்ரேலிய நடவடிக்கையிலிருந்து அமெரிக்கா வெளிப்படையாக விலகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என்று கூறியுள்ளார்.