வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.. அதே போல் சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது..
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் இன்று காலை கணித்திருந்தது…
இந்த நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது..
இதனிடையே தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read More : சென்னையை குறிவைத்த கனமழை..!! 4 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!



