புதுமண காதல் தம்பதிகள் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அனந்தமாடன் பச்சேரி காலனியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகன் தங்க முனியசாமி (28). இவர், அதே பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே உள்ள துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (22). இவர், அனந்தமாடன்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, தங்க முனியசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருமே காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும் இரவும் சண்டை வந்துள்ளது. மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால், உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், தருவைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒரு கயிற்றின் ஒரு முனையில் முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கிட்ட நிலையில், சடலமாக கிடந்தனர்.
பின்னர், இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். திருமணமான 2 மாதத்தில் கணவன், மனைவி இறந்து உள்ளதால் உதவி ஆட்சியர் கவுரவ்குமார் விசாரணை நடத்தினார். புதுமண காதல் தம்பதிகள் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.