மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்கிறார். கடற்கரை சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா சிலையிலும் மரியாதை செய்ய அதிமுக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், ஆண்டுதோறும் சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்குத் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்துவதை ஓ.பன்னீர்செல்வம் வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல, இந்த ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் மரியாதை செலுத்த உள்ளதாக கடந்த 19-ம் தேதியே அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்தத் திட்டத்தை தற்போது ஓபிஎஸ் ரத்து செய்துள்ளார். ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கையை திரும்பப் பெற்றுள்ள அவர், நாளை தேனி மாவட்டம் போடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மட்டும் மலர் தூவி மரியாதை செய்யப்போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ்-ன் இந்தத் திடீர் பின்வாங்கல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. அவரது மிக நெருங்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் தற்போது, அதே பாதையைப் பின்பற்றுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் அரசு சார்பில் நடைபெறும் விழாக்களையோ அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்புடன் நேரடியாக மோதுவதையோ தவிர்க்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் மேடைகளில் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், அவரது இந்தச் சென்னை பயண ரத்து அந்தத் தகவலுக்கு மேலும் வலுசேர்ப்பது போல அமைந்துள்ளது. “அண்ணன் எப்போது முடிவெடுப்பார்?” என்று அவரது ஆதரவாளர்கள் ஒருபுறம் ஆவலுடன் காத்திருக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஓபிஎஸ்-ன் இந்த நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.



