உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி மீண்டும் 3-ம் இடத்துக்கு சென்றுள்ளார்..
ப்ளூம்பெர்க் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வணிக அதிபரான கௌதம் அதானி மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார், அமேசானின் ஜெஃப் பெசோஸ் பட்டியலில் அவரை முந்தி மீண்டும் 2-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ப்ளூம்பெர்க்-ன் சமீபத்திய பட்டியலின்படி, கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 138 பில்லியன் டாலர்கள். டெஸ்லாவின் எலோன் மஸ்க் 245 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 82.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 11வது இடத்தில் உள்ளார்.
புளூம்பெர்க் பெரும் பணக்காரர்கள் பட்டியல் என்பது நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புதுப்பிக்கப்படும் உலகின் பில்லியனர்களின் தினசரி தரவரிசைக் குறியீடாகும். கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான ப்ளூம்பெர்க்கின் பணக்காரர் பட்டியலில், 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி 3வது இடத்தை பிடித்தார்.. ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களுக்குள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தார்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் இருக்கிறது. துறைமுகங்கள், மின்சாரம், பசுமை ஆற்றல், எரிவாயு, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும். அதானி குழுமம் இப்போது 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..