போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும் எனவும், பொது நலன், பணிப் பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை புரிந்து பணிக்கு திரும்ப சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்பொழுது மண்டலம் 5 மற்றும் 6ல் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணிகள் ராம்கி (Ramky) நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, 16.07.2025 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம், ஒப்பந்தப்படி, மொத்தம் 3,809 தூய்மைப் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும்.
தற்போது வரை 1,770 பணியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. மீதமுள்ள 2,039 பணியிடங்கள், ஏற்கனவே பணியாற்றி வந்த சுய உதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தலின்படி ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 300 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். எனவே எந்தவொரு தற்காலிக தூய்மைப் பணியாளரும் நீக்கப்படவோ, பணி மறுப்பு செய்யப்படவோ இல்லை.
இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் இந்தப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு
- வருங்கால வைப்பு நிதி (PF),
- ஊழியம் மற்றும் மருத்துவக்காப்பீடு (ESI),
- போனஸ்,
- பண்டிகை கால சிறப்பு உதவிகள்,
- திருமண உதவித்தொகை மற்றும் கல்வி/ உயர்கல்வி உதவித்தொகை,
- இன்சூரன்ஸ் திட்டத்தில் விபத்து மரணம்/ இயற்கை மரணம் உள்ளிட்டவற்றிற்கு நிவாரண இழப்பீடுநிதியும் வழங்கப்படுகின்றன.
- ஆண்டுதோரும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன.
தொழிளாலர் நல நிதி:
- திருமண உதவித் தொகை – ரூ. 20,000/- வரை
- கல்வி உதவித் தொகை – ரூ. 12,000/- வரை
- மரண நிகழ்வுக்கான நிதி உதவி
- புத்தகத்திற்கான நிதி உதவி
- கணினி பயிற்சி நிதி உதவி
விடுப்பு மற்றும் விடுமுறை நாட்கள் பலன்கள்:
- தற்செயல் விடுப்பு – 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)
- ஈட்டிய விடுப்பு – 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)
- தேசிய விடுமுறை நாட்கள் (இரட்டிப்பு சம்பளம் பெரும் வசதியும் உண்டு) பணியாளர்கள்
இந்த நாட்களில் பணி செய்யாவிட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் பெறும் வசதி உண்டு.
மேலும் இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள், மழைக்கால உடைமற்றும் சுகாதார பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனுடன் தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.
சுய உதவிக் குழுவின் மூலமாக பணிகளை செய்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Read more: காதலியை கரம் பிடிக்கிறார் ரொனால்டோ.. நிச்சயதார்த்த மோதிரம் மட்டும் 25 கோடியாம்..!!