இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 இடங்களும், கொல்கத்தாவில் 90 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன (இதில் 8 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், ஒரு இடம் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது). இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 4 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்களுக்கு 10 ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, பட்டதாரிகள் (Degree holders) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் வட்டார மொழியில் (தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில்) பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருப்பது அவசியமாகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.24,250 முதல் அதிகபட்சமாக ரூ.53,330 வரை வழங்கப்பட உள்ளது.
தேர்வு முறையானது ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு (LPT) என இரண்டு நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்ட மொழித் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் rbi.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ.450-ம், எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை நடைபெறும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Read More : பறவைக் காய்ச்சல் பீதி..!! அதிரடியாக குறைந்த முட்டை விலை..!! ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.82..!!



