18 ஆண்டுகள் கழித்து தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளர்கள் டியாஜியோ பிஎல்சி, அணியை முழுமையாகவோ அல்லது ஓரளவாகவோ விற்க திட்டமிட்டுள்ளனர் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
RCB அணியை இந்தியாவில் இயக்கி வரும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின் படி, அணியின் உரிமையை முழுமையாக விற்கும் நிலையில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,834 கோடி வரை மதிப்பு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் விற்பனை சம்பந்தமான தகவல்கள் வெளிவந்தவுடன், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன பங்குகள் 3.3% உயர்வு கண்டது. இருப்பினும், இது இறுதியான விற்பனை முடிவாக இல்லை என்றும், அனைத்து விருப்பங்களும் பரிசீலிக்கப்படுவதாகவும் நிறுவனத் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
RCB அணி IPL பட்டத்தை வென்றதற்குப் பிறகு, அந்த வெற்றியை கொண்டாடும் விழா பெங்களூருவில் நடந்தது. ஆனால் அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இதனால், அணியின் மகிழ்ச்சி சோகமாக மாறிவிட்டது. ரசிகர்கள் பாதுகாப்பு ஏற்கனவே கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்தச் சம்பவம் RCBக்கு ஒரு புதிய பிரச்சனையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மல்லையா முதல் டியாஜியோ வரை: 2008-ல் விஜய் மல்லையா மூலம் ஆரம்பிக்கப்பட்ட RCB உரிமை, பின்னர் அவர் சந்தித்த கடன் சிக்கலால் டியாஜியோவிற்கு சென்றது. இந்திய மதுபானத் துறையில் மிகப்பெரிய பெயராக விளங்கும் டியாஜியோ, அதன் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் RCB-ஐ வழிநடத்தி வந்தது.
RCB அணி இத்தனை வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், உலகம் முழுவதும் பலரும் விரும்பி பின்தொடர்ந்த அணியாக இருந்தது. இப்போது அந்த அணி முதன்முறையாக கோப்பையை வென்றிருக்கிறது. இந்த வெற்றியை பயன்படுத்தி, டியாஜியோ நிறுவனம் அதிக பணம் சம்பாதிக்க அந்த அணியின் உரிமையை விற்க திட்டமிடுகிறது.
Read more: 11 பேரின் உயிரை காவு வாங்கிய RCB அணி..!! ஐபிஎல்லில் விளையாட ஓராண்டு தடை..? பிசிசிஐ அதிரடி..!!