கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இது குறித்து நீதிபதி வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகின்றது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மிண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தகட்டை தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
புலன் விசாரணை முடியும் வரை வழக்கின் ஆவணங்களை மாணவியின் பெற்றோருக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக் காட்டி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாக கூறினார்.
மாணவி பயன்படுத்திய செல்போன் மற்றும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதைப் புலன் விசாரணை செய்யும் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் வழங்க வேண்டும் என பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.