மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், படத்தை எவ்வித தடையும் இல்லாமல் திரையிடவும், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டுமென கமல்ஹாசன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதில், ”தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா..? ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன..? மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுக்கிறதா..? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில், பிரச்சனையை தீர்த்துவிட்டு கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் தான், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”திராவிட மொழிகளின் தாய், தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தவறாக கூறவில்லை. வாய்க்கு வந்ததை அவர் கூறவில்லை. கன்னட மொழி குறித்து கமல் பேசியதில் எந்த தவறும் கிடையாது. பணமா..? இனமா..? என்பதில் இனமே முக்கியம். 63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களின் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா..? என கேள்வி எழுப்பினார்.
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ..? தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால், அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்..? வரலாற்றை படித்தவர் கமல். இனி சித்தராமையா தான் வரலாற்றை படிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் எந்த இடையூறும் இல்லாமல் ஓடின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் அது தனிப்பட்ட நபரின் மன்னிப்பாக இருக்காது. தமிழினத்தையே அவமானப்படுவதாக ஆகிவிடும். நாங்கள் கமல்ஹாசனுக்கு துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.