கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சூர்யாவின் 42-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தின் மூலம் சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களை இயக்கி கமர்ஷியல் வெற்றிப்பட இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ள சிறுத்தை சிவாவுடன் சூர்யா கூட்டணி வைத்தார். இந்தக் கூட்டணி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாவதாகவும், இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகி சூர்யா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதில், 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகும் நிலையில், அரத்தர், மண்டாங்கர், வெண்காட்டார், முக்காட்டார், பெருமனத்தார் என 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாக கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா உள்பட பல இடங்களில் நடைபெற்றன. சூர்யா 42 படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து இந்தப் படத்தின் ஹாஷ்டேக்குகளைப் பகிர்ந்து இணையத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏப்ரல் 16ஆம் தேதி சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், புகழ்ச்சிகளுக்கும், இடியின் சத்தங்களுக்கும் நடுவே போர் வீரன் நுழைகிறான்” என்ற கேப்ஷனோடு புது போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும், இந்தப் படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகமப சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் ,இந்த அறிவிப்பு முன்னதாக இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில், சூர்யாவின் 42-வது படத்தின் பெயர் ’கங்குவா’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2024 ஆரம்பத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.