மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்திருப்பதாக கூறினார். இது கர்நாடக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். மேலும், மன்னிப்பு கேட்டால் என்ன..? ஏன் ஈகோ பார்க்க வேண்டும்..? எனவும் காட்டமாக தெரிவித்தார். ஆனால், கடைசி வரை கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ”இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் எல்லாம் ஏற்கனவே ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டவர்கள். படைவீரர்கள் நிறைந்த படை இது. எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அது தக் லைஃப் படத்தை பற்றி அல்ல. பிறகு விரிவாக பேசுவோம். ஒரு தமிழனாக அதற்கான நேரத்தை ஒதுக்கி தருவது என்னுடைய கடமை” என தெரிவித்துள்ளார்.