கன்னட மொழி சர்ச்சையை தொடர்ந்து, கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பல கன்னடக் குழுக்களும் மொழி ஆர்வலர்களும், கமல்ஹாசன் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். கன்னட ஆதரவு குழுக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) மாநிலத்தில் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. தனது கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படாது என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது. .
இந்த மொழி சர்ச்சை சினிமாவைத் தாண்டி நகர்ந்துள்ளதாக சேம்பர் தலைவர் எம். நரசிம்மலு கூறினார். மேலும் “கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தக் லைஃப் கர்நாடகாவில் ஓடாது. இது நிச்சயமாக, இது தொழில்துறையைப் பற்றியது அல்ல, இது மாநிலத்தைப் பற்றியது..
அரசியல் கட்சிகள் கூட இதை எதிர்க்கின்றன, கன்னட சார்பு அமைப்புகள் அவர் பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. அவர் மன்னிப்பு கேட்காமல் படத்தின் வெளியீடு கடினம். எங்கள் திரையரங்குகள் அல்லது விநியோகஸ்தர்கள் அதைத் திரையிடத் தயாராக இல்லை. படத்தை இங்கே எப்படி வெளியிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், கன்னட மொழிக்கு வளமான வரலாறு உள்ளது என்றும், கமல்ஹாசனுக்கு அது பற்றி தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அதே போல் கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும். “ஒருவர் தங்கள் தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவத்தை வெளிப்படுத்துவது கலாச்சார திவால்நிலையின் அடையாளம். குறிப்பாக கலைஞர்களுக்கு, ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் நெறிமுறைகளைக் கொண்டிருப்பது அவசியம்,” என்று அவர் கூறினார். கமல்ஹாசன் கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்திருந்தாலும், அவரது கருத்து அப்பட்டமான ஆணவத்தை பிரதிபலித்தது” என்று தெரிவித்தார்.
எனினும் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் கூறிவிட்டார். இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு ஜனநாயகம். நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மை. ஒரு சிலரை தவிர வேறு யாரும் அதை சந்தேகிக்க மாட்டார்கள். எனக்கும் ஏற்கனவே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, நான் தவறாக கூறி இருந்தால், நான் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் , கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி தாக்கல் செய்த மனுவில், கர்நாடக அரசு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் திரைப்படத் துறை அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது..
தக்லைஃப் படத்தை திரையிடுவதற்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதை காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படம் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான முதலே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.