தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார். சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய் இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களை தூவியும், மாலைகள் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விஜய்யை காண்பதற்காக காலை 9 மணி முதலேயே தவெக தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் மகாதானபுரம் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்தில் கூடிவருகின்றனர். தொடர்ந்து விஜய் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ரோடு ஷோ மேற்கொண்டார். வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் வாயில் விசில் வைத்துக்கொண்டு பாதுகாவலர்கள் சூழ சைக்கிள் ஓட்டி சென்றார். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கையசைத்தும், விசில் அடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



