மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது..
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.. மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.. ஆனால் 2-ம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அதனை தடை செய்தது.. அதனால் கோவில் முன்புறம் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.. இதை மாற்றக் கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
மதுரையை சேர்ந்த ரவிகுமார் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் “ திருப்பரங்குன்றம் மலையில் டிச.,3-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன்.. மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை.. பதிலாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்டவிரோதம்.. தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்தது..
இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.. விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்துள்ளார்.. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..



