கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையில், 7 மணி நேரம் தாமதமானது ஏன்? கூட்ட நெரிசல் பற்றி தெரியாதா உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்.. எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாகனத்தை இயக்கியதாகவும் விஜய் கூறியிருந்தார்..
அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சதி நடந்திருப்பதாகவும், சிபிஐ தான் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விஜய் கூறியிருந்தார்.. மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.. ஒருவேளை விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அது விஜய்க்கு பெரும் பின்னடைவாக இருக்கும்..
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விஜய் ஆஜரான நிலையில் தற்போது சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.. அதன்படி இன்று ( மார்ச் 10 ) விஜய் மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தில் 3-வது முறையாக விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகமாட்டார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையை ஒத்திவைக்குமாறு சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டது.. திட்டமிட்ட வேறு அரசியல் பணிகள் இருப்பதால் விஜய் நாளை விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்கள் கழித்து வேறு ஒரு தேதியில் விஜய் ஆஜராக தயாராக இருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது..



