தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவரது அணியின் முதுகெலும்பாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் இணையவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலில் ஓபிஎஸ் பக்கம் உறுதியாக நின்ற வைத்திலிங்கம், தற்போது அந்த அணியில் நிலவும் அரசியல் தேக்கநிலை மற்றும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவது போன்ற காரணங்களால் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் சாய்ந்த நிலையில், வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் போன்ற சீனியர் தலைவர்களின் வெளியேற்றம், ஓபிஎஸ் முகாமை ஏறத்தாழ முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. மறுபுறம், இவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கதவுகளை இறுக மூடியுள்ளதால், தங்களின் அரசியல் வாழ்வாதாரத்தை தக்கவைக்க ஆளுங்கட்சியே தஞ்சம் என இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வந்த வைத்திலிங்கத்தின் வருகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுகவின் கோட்டையை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேசமயம், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியின் வீழ்ச்சி ஆகியவை திமுகவுக்கு தேர்தல் களத்தில் கூடுதல் சாதகமான சூழலை உருவாக்கி தந்துள்ளது. இந்த திடீர் அரசியல் நகர்வு, அதிமுகவின் தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் அணியின் எஞ்சிய நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : செல்வமகள் சேமிப்பு திட்டத்தை விடுங்க..!! இதில் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.11.57 கோடி வரை கிடைக்கும்..!!



