தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல் வகாப், கடையநல்லூர் நகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலரான இவர் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரை சேர்ந்த ஷேக் உதுமான் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து கவுன்சிலர் அப்துல் வகாப் 52 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் ஆனால் அவர் வீட்டுமனையும் கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேசி அப்துல் வகாப்பிடம் இருந்து பணத்தை வாங்கி தருமாறு ஷேக் உதுமான் தெரிவித்துள்ளார். அச்சம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் (36) என்பவர் மற்றும் தென்காசி தொகுதி செயலாளர் செல்வம் (42), செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் விவேக் (30), செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி இளையராஜா (34) ஆகியோர் அப்துல் வகாப்பை காரில் கடத்திச் சென்று மிரட்டி உள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிச்சென்ற கவுன்சிலர் அப்துல் வஹாப் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். பிரமுகர்கள் 4️ பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.