புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர், ராதையுடன் இணைந்த வடிவில் காட்சி தரும் இந்த கோவில், மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவில், பக்தர்கள் மன அமைதி தேடி வரும் ஓர் உன்னத இடமாக விளங்குகிறது.
விட்டோபா கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றாலும், முக்கியப் பண்டிகை நாட்களில் இங்கு விமரிசையான கொண்டாட்டங்கள் அரங்கேறும். இக்கோவிலின் மிக முக்கியமான திருவிழாவாக கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்து வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இக்கோவிலின் தனிச்சிறப்பாகப் பார்க்கப்படுவது, விழாக் காலங்களில் மூலவர் கிருஷ்ணர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதுதான். இந்தத் தங்கக் கவச அலங்காரத்தை காண பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.
விடோபா கோவில் வளாகத்தினுள், கிருஷ்ணர் மற்றும் ராதை சன்னதியை தவிர்த்து, கிருஷ்ணர் பாதங்கள், ஸ்ரீ வேணுகோபாலர், பெரிய திருவடி ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஆகியோருக்கான சன்னதிகளும் அழகுடன் அமைந்துள்ளன. குறிப்பாக, பசுமை நிறைந்த சூழலில் அமைந்துள்ள துளசி மாடம் பக்தர்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது.
இங்கு வரும் பக்தர்கள், மன அமைதியுடன் துளசி மாலைகள் அணிவித்து வழிபாடு செய்வதை தங்களுக்கு கிடைத்த வரமாக கருதுகின்றனர். அமைதியும் பக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த விடோபா கோவில், புதுக்கோட்டை மக்களின் ஆன்மீக வாழ்வுடன் இரண்டற கலந்துள்ளது.
Read More : கார்த்திகை அமாவாசை!. மகாலட்சுமியின் திருஅவதாரம்!. அனைத்து கஷ்டங்களும் தீர இதை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!.



