உடலை சுத்தம் செய்வது குறித்து சிந்தித்தால் பொதுவாக எல்லோர் நினைவுக்கும் வருவது சோப்பு தான். சோப்பு போட்டு குளிக்கும்போது அப்படியே அந்தரங்க பகுதியிலும் அதையே பயன்படுத்துவது பலரின் வழக்கமாக இருக்கும். இதனால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் கூட மறையும் என பலரும் நம்பி கொண்டிருக்கக் கூடும்.
ஆனால் அது உண்மையல்ல. குளியல் சோப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் உங்களுடைய அந்தரங்க பகுதிகள் மென்மையான சருமத்தை கொண்டிருக்கும் என்பதால் அந்த இடங்களில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சில பெண்களுக்கு ஏதேனும் உடல் நல குறைபாடுகள் அல்லது உடலின் வெப்பம் காரணமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். இவர்கள் துர்நாற்றத்தை தவிர்க்கவும், அழுக்கு சேரக் கூடாது என்றும் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவார்கள். நல்ல வாசனையான சோப்பை பயன்படுத்தி ஒரு நாளில் பலமுறை பிறப்புறுப்பை சுத்தம் செய்வார்கள். ஆனால் உங்களுடைய பிறப்புறுப்பில் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவிக் கொண்டே இருப்பதால் பிறப்புறுப்பு வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது
பிறப்புறுப்புகளில் இயற்கையாகவே எண்ணெய் படலம் காணப்படும். இதனால் அங்கு ஈரப்பதம் இருக்கும். அடிக்கடி சோப்பு போடுவதால் அங்குள்ள சருமத்தின் மீது இருக்கும் இயற்கை எண்ணெய் படலம் முற்றிலும் நீங்கிவிடும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வறட்சி வரலாம். இந்த வறட்சியால் அரிப்பு, புண்கள் ஏற்படலாம்.
நம்முடைய அந்தரங்க உறுப்பில் இயற்கையாகவே அதனை பாதுகாக்கும் வகையில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அடிக்கடி சோப்பு போட்டு அங்கு தேய்த்துக் கழுவுவதால் அந்த பாக்டீரியாக்கள் நீங்கிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் எளிதில் உங்களுக்கு நோய் தொற்றுகள் வரலாம்.
அடிக்கடி பிறப்புறுப்பில் சோப்பு போட்டு கழுவினால் அங்குள்ள பி.எச் அளவு மாறும். இந்த அளவுகள் மாறுவதால் எதிர்மறையான பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளில் அரிப்பு, எரிச்சல், புண்கள் முக்கிய அறிகுறிகளாகும். பிறப்புறுப்பில் சோப்பை பயன்படுத்தவே கூடாதா? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். பிறப்புறுப்பில் சோப்பு பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் குளிக்கும் போது ஒரு தடவை பயன்படுத்தினால் பிரச்சனையை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி அங்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை வரலாம்.
மிதமான சூடுள்ள வெந்நீரில் உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இந்த நீரை பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம். இதனால் அந்தரங்கப் பகுதியில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். அந்த இடத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும் விரைவில் குணமாகும். எந்த நோய் தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்கவும் இந்த முறை பயன்படும். ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை கூட உப்பு கலந்த வெந்நீரால் பிறப்புறுப்பை கழுவலாம்.
Readmore: வெங்காயத்தில் உள்ள கருப்புப் புள்ளிகளால் ஆபத்து?. சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?.