ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும் என்றும் ஜூன் மாதத்தில் இயல்பை விடவும் குறைவான மழையே இருக்கும் எனவும் இந்த மழைக் காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் உள்ளது. ஜூன் மாதத்தில் பெய்யும் குறைவான மழை காரணமாக, காரீப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒருசில பகுதிகளைத் தவிர்த்து ஜூன் மாதத்தில் குறைவான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. சில இடங்களில் மட்டுமே இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.