கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து மருமகளை மாமியார் கழுத்தறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29) என்ற பெண், தனது முதல் கணவர் மறைவுக்கு பிறகு மரிய ரொசாரியோ என்ற பிசியோதெரபிஸ்ட்டை காதலித்து 2-வதாக திருமணம் செய்துகொண்டதே இந்த கொலைக்கு காரணமாக மாறியுள்ளது.
இந்த திருமணத்தில் விருப்பமில்லாத மாமியார் கிறிஸ்தோப்மேரி (55), தனது குடும்ப கௌரவம் பாதிக்கப்பட்டதாகக் கருதி, நந்தினியைத் தீர்த்துக்கட்ட நீண்ட நாட்களாக திட்டம் தீட்டியுள்ளார். தன் மீதான சந்தேகத்தை தவிர்க்க, கடந்த 4 மாதங்களாக மருமகளிடம் மிகவும் இணக்கமாகப் பழகி வந்துள்ளார் கிறிஸ்தோப்மேரி.
நந்தினியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, தனது தோழி எமிலியின் ஆலோசனையின் பேரில் ஒரு பயங்கர திட்டத்தை வகுத்துள்ளார். குடும்பப் பிரச்சனைகள் தீர ஆற்றுப்பகுதியில் ரகசிய மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என நந்தினியை நம்ப வைத்த மாமியார், கடந்த 29-ம் தேதி அதிகாலை அவரை சோழம்பட்டு மணிமுக்தாற்றின் கரையோரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு எமிலி பூஜை செய்வது போல் பாவனை செய்ய, நந்தினியை சில வழிமுறைகளை பின்பற்ற சொல்லி கண்ணை மூட வைத்துள்ளனர். நந்தினி எலுமிச்சை பழத்தை கையில் ஏந்தி கண்ணை மூடி நின்றிருந்த அந்த விநாடியில், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை கிறிஸ்தோப்மேரி கொடூரமாக அறுத்துள்ளார்.
இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் நந்தினி உயிரிழந்தார். கொலையை மறைக்க, அவரது உடலையும் தலையையும் தனித்தனியாக ஆற்றங்கரையில் புதைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், தனது மனைவியை காணவில்லை என மரிய ரொசாரியோ காவல்துறைக்கு அளித்த புகாரால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, சங்கராபுரம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கிறிஸ்தோப்மேரியும் அவரது தோழியும் சிக்கினர். “மருமகளை கொன்றுவிட்டு, மகனுக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க நினைத்தேன்” என மாமியார் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. தற்போது இரு பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



