கல்வி கோயில் என்று போற்றப்படும் பள்ளிக் கூடத்தையே தனது முறையற்ற லீலைகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியரின் செயல், சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கான்கேர் மாவட்டம் இந்திரபிரஸ்தா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ராஜேஷ் பால் என்ற தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர் ரூமிலேயே பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே ஏதோ தவறான காரியங்கள் நடப்பதாக கிராம மக்கள் சந்தேகித்து வந்தனர். தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலின் நடத்தையில் மாற்றம் தெரிந்ததை அடுத்து, கிராம மக்கள் அவரை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது ஒருநாள், பள்ளியின் ஸ்டோர் ரூமில் அவரும், அங்குள்ள பெண் ஊழியர் ஒருவரும் அந்தரங்க உறவில் இருந்ததை கிராம மக்கள் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, ஒட்டுமொத்த கல்வித் துறையையுமே தலைகுனிய வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஊர் மக்கள் கூறிய தகவல்கள் இன்னும் அதிர்ச்சிகரமாக உள்ளன. விடுமுறை நாட்களில் கூட, முக்கியமான அலுவலக வேலைகள் இருக்கிறது என்று பொய் சொல்லிவிட்டு இருவரும் பள்ளிக்கு வருவார்களாம். பள்ளி மூடப்பட்டிருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, இருவரும் இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிடுமாறு அந்த ஆசிரியருக்கு ஊர் மக்கள் எச்சரிக்கை விடுத்தும், அவர் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தனது லீலைகளை தொடர்ந்து வந்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிய தொடங்கியவுடன், வீடியோவைப் பரப்பாமல் இருக்க ராஜேஷ் பால் சிலருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆடியோ கிளிப் ஒன்றும் வெளியாகியுள்ளது. தனது குற்றத்தை மறைக்க அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, அவருக்கு இன்னும் பெரிய சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தன்குமாரிடம் முறையான புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தை உணர்ந்த ஆட்சியர், இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் டி.ஆர்.சாஹுவுக்கு உத்தரவிட்டார்.
கல்வி அலுவலர் நடத்திய விரிவான விசாரணையில், தலைமை ஆசிரியர் மீதான புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையை தொடர்ந்து, ராஜேஷ் பாலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : 2026இல் தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய் தான்..!! அவர் கை காட்டுபவர்தான் MLA..!! செங்கோட்டையன் அதிரடி பேச்சு..!!



