வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் இணைக்காதவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும் மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்துள்ளார்.
ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக்( கைரேகை, கருவிழி, உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் ஆதார் கார்டு என்பது இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற இந்தியர்களுக்குக் கிடையாது. இந்த அட்டையை பெறுவதற்கு சாதி, மதம் குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லை. இந்த ஆதார் கார்டு எண் சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள், சேவைகளைப் பெற உதவுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் எண் இணைப்பு குறித்து மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார். அதில், ஆகஸ்ட் 1, 2O22 முதல் தன்னார்வ அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே இருக்கும் மற்றும் வருங்கால வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேகரிக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான இலக்குகள் அல்லது காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். இதற்கான அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.