இந்தியாவில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிம படிவுகள் கண்டறியப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவை, கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதையடுத்து பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் பெரும்பாலான நாடுகள் ஈடுபட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு மிக மிக முக்கியமானது என்றால் அது பேட்டரிக்கள் தான். அந்த பேட்டரிகளை தயாரிப்பதற்கு மூலக்கூறாக முக்கிய பங்கு வகிப்பது இந்த லித்தியம் கனிமம். மொபைல் போன், மடிக்கணினி, டிஜிட்டல் கேமரா, மின்சார வாகனனங்கள் போன்றவைகளுக்கு பேட்டரிகள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக இந்த லித்தியம் கனிமம் உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிக்கப்பட்டாலும், இந்த கனிமம் இதுவரை இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், அதிகளவிலான லித்தியம் பேட்டரிகள், சீனா, அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நாட்டில் லித்தியம் கனிமங்களை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், தற்போது ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரைசி மாவட்டத்தின் சலால் ஹைமனா என்ற பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பூமிக்கு அடியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்தியாவில் லித்திய படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்றிலேயே இது முதல்முறை ஆகும். மேலும், லித்தியம், தங்கம் போன்ற 51 கனிமத் தொகுதிகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் இப்போது பேட்டரிக்களுக்கு தேவையான முக்கிய தாது உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட லித்தியம் பேட்டரிக்கள் இனி வரும் காலங்களில் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லித்தியம் பேட்டரிக்கள் உபாத்தி செய்வதன் மூலம் மின்சார வாகனத்தின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்டுகிறது.