ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஜெகநாதர் ஆலயம், உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலயத்தின் பின்னால் இருக்கும் மர்மங்களும் அதிசயங்களும் இன்றும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, இக்கோவிலில் உள்ள மரத்தால் ஆன மூலவர் சிலைக்குள் கிருஷ்ணரின் இதயம் இன்றும் துடித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுவது, ஆன்மீகத்தையும் அறிவியலையும் கடந்து ஒரு பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மகாபாரத போரின் இறுதியில் கௌரவர்கள் அனைவரும் மாண்டதை கண்டு துடித்த காந்தாரி, அதற்கு காரணமான கண்ணனை நோக்கி, “என் வம்சம் அழிந்ததைப்போல யாதவ குலமும் அழியும்” என சாபமிட்டார். அந்தச் சாபத்தின் விளைவாக யாதவ குலம் அழிந்தபோது, மனமுடைந்த கிருஷ்ணர் தியானத்தில் இருந்த சமயம் வேடன் ஒருவன் எய்த அம்பு தாக்கி கிருஷ்ணர் உயிர்நீத்தார்.
பாண்டவர்கள் கண்ணனின் உடலை தகனம் செய்தபோது, உடல் முழுவதும் எரிந்தும் அவரது இதயம் மட்டும் எரியாமல் துடித்துக் கொண்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த இதயத்தை ஒரு மரத்துண்டில் வைத்து ஆற்றில் விட, அது கரை ஒதுங்கிய இடமே பூரி ஆகும்.
அங்குள்ள அரசன் அந்த இதயத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பிரம்மாண்ட கோவிலைக் கட்டி, மரச்சிலையில் அந்த இதயத்தை பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘நபகலேபரா’ எனும் சடங்கு மிக ரகசியமாக நடைபெறுகிறது. அதாவது, இந்த விழாவின்போது, பழைய மரச்சிலைக்குப் பதில் புதிய சிலை மாற்றப்படும். அப்போது பழைய சிலைக்குள் இருக்கும் ‘பிரம்ம பதார்த்தா’ எனப்படும் அந்தப் புனித இதயத்தைப் புதிய சிலைக்குள் பூசாரி மாற்றுவார்.
இந்தச் சடங்கு நடைபெறும் நாளில் பூரி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கப்படும். அந்த இதயத்தைத் தொடுவதோ அல்லது பார்ப்பதோ மனித உயிருக்கு ஆபத்து என்பதால், அனுபவம் மிக்க மூத்த பூசாரி தனது கண்களையும், கைகளையும் பட்டுத்துணியால் கட்டிக்கொண்டே இந்த ரகசிய மாற்றத்தை செய்கிறார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அதிசய நிகழ்வைக் காண சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பூரியில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்த இதயத்தின் துடிப்பை உணர முடியும் என பூசாரிகளால் நம்பப்படும் இந்த ரகசியம், பூரி ஜெகநாதர் ஆலயத்தை தேசத்தின் மிக முக்கிய ஆன்மீகப் பொக்கிஷமாக மாற்றியுள்ளது
Read More : “உலகப் பத்திரிகையே நம்ம தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்றாங்க..” CM ஸ்டாலின் பெருமிதம்..!



