12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, அதே வகுப்பை சேர்ந்த மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னுடன் படித்து வரும் மாணவன் தான், இந்த கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மாணவி அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர். பின்னர், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.