காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சோமங்கலம் பகுதியில், 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி, தனது காதலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாருமி (15) என்ற அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தார். இதற்கிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறுமியை காணவில்லை எனப் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
போலீசாரின் விசாரணையில், நல்லூரைச் சேர்ந்த நவமணி என்ற ரவுடியுடன் சிறுமி காதலில் இருந்தது தெரிய வந்தது. சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற நவமணி, சோமங்கலத்தை ஒட்டியுள்ள பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்ததுடன், அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.
இதையடுத்து, நவமணியை அப்போது கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நவமணி மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி மாயமான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நவமணி, சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வந்த பின்னரும் அவர் சிறுமியுடன் மீண்டும் பழகி வந்துள்ளார். இதனால், சிறுமி அடிக்கடி தனது காதலன் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், ரவுடி நவமணியுடன் மகள் பழகி வருவதை மிக கடுமையாக கண்டித்து, சிறுமியை அடித்துள்ளனர். பெற்றோரின் இந்த கண்டிப்பால் சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் நவமணி வீட்டுக்குச் சென்ற சிறுமி, அங்கு யாரும் இல்லாததை அறிந்து வீட்டின் அறையை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். பின்னர், மின்விசிறியில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் நவமணியின் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் இந்த விபரீதம் தெரிய வந்தது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சோமங்கலம் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றித் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



